வெடியரசன் கோட்டை விவகாரம் - டக்ளஸின் ஆதரவிலா ஆக்கிரமிப்பு; விந்தன் பகிரங்கம்! |


சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலுள்ள வெடியரசன் கோட்டையை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளுக்கு, சிறிலங்கா கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றதா என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது அனுமதியின்றி சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாதை ஒன்று வைக்கப்பட்டுள்ளது அதனை உடனடியாக அகற்றுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அகற்றப்படாமையே இருக்கின்றது.

ஆகவே தொல்பொருள் திணைக்களத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பௌத்த மயமாக்கல் தொடர்பில் சிறிலங்கா கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரியவை  தொடர்பு கொண்டு வினவிய போது,  இந்த அறிவித்தல் பலகை தொல்பொருளியல் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரிலேயே சிறிலங்கா கடற்படையினரால் வைக்கப்பட்டது என உறுதிப்படுத்தினார்.

மேலும் சிறிலங்கா அரசாங்கத்தால் நெடுந்தீவு வெடியரசன் கோட்டை புராதன முக்கியத்துவம் வாய்ந்த இடமாக வர்த்தமானி அறிவித்தலின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.

எனவே எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளையும் கடற்படையினரால் முன்னெடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வெடியரசன் கோட்டையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த அறிவித்தல் பலகை சில தரப்பினரால் அகற்றப்பட்டுள்ளது.

அதனை யார் செய்தர்கள் என எனக்கு தெரியாது. இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் தொல்பொருளியல் திணைக்களத்தின் அலுவலங்கங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் குறித்த அறிவித்தல் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்குமாறு எமக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதற்கேற்பவே குறித்த அறிவித்தல் பலகை வைக்கப்பட்டது. தற்போது சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் மாத்திரம் வைக்கப்பட்டிருக்கும் இந்த அறிவித்தல் பலகைகளை தமிழ் மொழியிலும் வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியிலுள்ள புராதன முக்கியத்துவம் வாய்ந்த வெடியரசன் கோட்டையானது புராதன பௌத்த முக்கியத்துவம் வாய்ந்த இடிபாடுகளைக் கொண்ட பகுதியென அடையாளப்படுத்தி, அறிவித்தல் பலகை வைக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா கடற்படையினரால் இந்த பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வரலாற்று ரீதியான உண்மைகளை சிதைக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை ஆதாரங்களுடன் சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகங்கள் மற்றும் தூதரங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.